Thursday, September 6, 2018

ஜெயலலிதா சொன்ன குட்டிக்கதை!

ஜெயலலிதா சொன்ன குட்டிக்கதை!

ஜெயலலிதா உயிரோடு இருந்த பொழுதில் ஒரு திருமண நிகழ்வின் போது 
நம்பிக்கை மற்றும் தாழ்வு மனப்பான்மையை விலக்குவதற்காக இரண்டு கதைகளைக் கூறினார்.



புலியாக மாறினாலும் பயம்

"சிலர் தேவையற்ற வீண் அச்சத்திற்கு ஆளாகி மகிழ்ச்சியான நேரங்களில் கூட மன சஞ்சலத்திற்கு ஆளாகிறார்கள். இந்த வீண் பயத்தைப் போக்கி, துணிச்சலுடன் செயல்பட்டால் வாழ்வில் வெற்றி நிச்சயம்.

ஒரு ஞானியின் நிஷ்டை கலைந்த போது, ஒரு சுண்டெலி ஞானி முன் வந்தது. சுண்டெலியைப் பார்த்த ஞானி, “உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டார். “பூனையைக் கண்டு எனக்கு பயமாய் இருக்கிறது. என்னை ஒரு பூனையாக மாற்றி விட்டால் உங்களுக்குப் புண்ணியம் உண்டு” என்றது எலி. ஞானி, எலியை பூனையாக மாற்றினார்.

இரண்டு நாட்கள் கழித்து, மீண்டும் அப்பூனை வந்து ஞானி முன் நின்றது. பூனையைக் கண்ட ஞானி, “இப்போது என்ன பிரச்சனை?” என்று வினவினார்.



“என்னை எப்போதும் நாய் துரத்துகிறது. என்னை நாயாக மாற்றி விட்டால் நன்றாக இருக்கும்” என்றது பூனை.

உடனே பூனையை நாயாக மாற்றினார் ஞானி. சில நாட்கள் கழித்து, அந்த நாய் வந்து ஞானியின் முன் நின்றது “இப்போது உனக்கு என்ன வேண்டும்?” என்று நாயிடம் கேட்டார் ஞானி. “புலி பயம் என்னை வாட்டி எடுக்கிறது. தயவு செய்து என்னை புலியாக மாற்றிவிடுங்கள்”, என்றது நாய்.

ஞானி, நாயை புலியாக மாற்றினார். சில நாட்கள் கழித்து ஞானி முன் வந்து நின்ற புலி, “இந்தக் காட்டில் வேடன் என்னை வேட்டையாட வருகிறான். தயவு செய்து என்னை வேடனாக மாற்றி விடுங்கள்” என்றது புலி. உடனே புலியை வேடனாக மாற்றினார் ஞானி.

சில நாட்கள் கழித்து, வேடன் ஞானி முன் வந்து நின்றான். “இப்போது உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டார் ஞானி. “எனக்கு மனிதர்களை கண்டால் பயமாக இருக்கிறது” என்று சொல்ல ஆரம்பித்தான். உடனே இடை மறித்த ஞானி, “சுண்டெலியே! உன்னை எதுவாக மாற்றினால் என்ன? உன் பயம் உன்னை விட்டுப் போகாது. உனக்கு சுண்டெலியின் இதயம் தான் இருக்கிறது. நீ சுண்டெலியாக இருக்கத்தான் லாயக்கு!” என்று கூறிவிட்டார் அந்த ஞானி.
ஆக, உள்ளத்தில் நம்பிக்கையும், அச்சமற்ற தன்மையும் இல்லாத வரை நாம் எதையும் அடையவோ, சாதிக்கவோ முடியாது. உங்களைப் பற்றி நீங்கள் எப்படி எண்ணுகிறீர்களோ அப்படித்தான் ஆவீர்கள். நீங்களே உங்களை தாழ்த்திக் கொள்ளாதீர்கள். உங்களுடைய எண்ணங்கள் செயலற்றுப் போனால், அச்சம், சோர்வு ஆகியவை உடலைக் கூனாக்கி, உள்ளத்தை மண்ணாக்கி விடும்."

உடைந்த பானையானாலும் உயர்வு

"ஒரு கிராமத்தில் ஏழை விவசாயி ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் தன் வீட்டுத் தேவைக்காக, தினமும் ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். தண்ணீர் எடுத்து வர இரண்டு பானைகளை வைத்திருந்தார். அந்தப் பானைகளை ஒரு நீளமான கழியின் இரண்டு முனைகளிலும் தொங்கவிட்டு, கழியைத் தோளில் சுமந்து செல்வார்.

இரண்டு பானைகளில், ஒன்றில் சிறிய ஓட்டை இருந்தது. அதனால் ஒவ்வொரு நாளும் வீட்டிற்கு வரும் போது, ஓட்டையுள்ள பானையில் பாதியளவு நீரே இருக்கும். ஓட்டையில்லாத பானை, ஓட்டையுள்ள பானையைப் பார்த்து, எப்போதும் அதன் குறையை பற்றி கிண்டல் செய்யும். இப்படியே பல நாட்கள் கடந்துவிட்டன. ஒரு நாள் ஓட்டையுள்ள பானை, தன் எஜமானனிடம் சென்று, “ஐயா, என் குறையை நினைத்து எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. எனக்குள்ள குறையால் வரும் வழியெல்லாம் தண்ணீர் சிந்தி, உங்கள் வேலைப் பளு மிகவும் அதிகரிக்கிறது. என் குறையை நீங்கள் தான் நிவர்த்தி செய்ய வேண்டும்” என்று கேட்டுக் கொண்டது.

இதற்குப் பதில் அளித்த விவசாயி, “பானையே நீ ஒன்று கவனித்தாயா? நாம் வரும் பாதையில், உன் பக்கம் இருக்கும் அழகான பூச்செடிகளை கவனித்தாயா? உன்னிடமிருந்து தண்ணீர் சிந்துவது எனக்கு முன்னமே தெரியும். அதனால் தான், வழி நெடுக பூச்செடி விதைகளை விதைத்து இருந்தேன். அவை நீ தினமும் சிந்திய தண்ணீரில் இன்று பெரிதாக வளர்ந்து, எனக்கு தினமும் அழகான பூக்களை அளிக்கின்றன. அவற்றை வைத்து நான் வீட்டை அலங்கரிக்கிறேன். மீதமுள்ள பூக்களை விற்றுப் பணம் சம்பாதிக்கிறேன்” என்றார். இதைக் கேட்ட பானை கேவலமாக உணர்வதை நிறுத்திவிட்டது. தாழ்வு மனப்பான்மையை விலக்கிவிட்டு துணிச்சலுடன் நீங்கள் செயல்பட்டால், உங்களால் சாதிக்க முடியாதது ஏதுமில்லை. வலிமை, வாழ்வை வானளவிற்கு உயர்த்தும். நம்பிக்கையைத் துணை கொண்டு நீங்கள் செயல்பட்டால், உங்கள் வாழ்வில் வெற்றி நிச்சயம்.

நல்ல செய்திகள், தகவல்கள் மனதை நல்வழியில் கொண்டும் செல்லும் என்று சொல்வது உங்கள் "குத்தூசி:

12 comments:

  1. கேட்டு வளர்ந்த தன்னம்பிக்கை கதைகள்தான்.

    ஆனால் இக்கதைகள் நடிகைகளின் வாயால் சொல்லப்படும்போது (அவர்களின் சுயலாபத்துக்காக திருமண வீட்டில்கூட) இக்கதைகளுக்கு ஏதோ மகத்துவம் உள்ளதுபோல் மா'க்கள் நினைப்பது நாம் இன்னும் அறியாமை சமூகத்தில் வாழ்வதைத்தான் காட்டுகிறது.

    (என் மனசாட்சி சொன்னதை விரல் டைப்பி விட்டது நண்பரே)

    ReplyDelete
    Replies
    1. உங்களின் மனசாட்சியை வரவேற்கிறேன். என்னைப் பொருத்தவரை யார் சொல்கிறார்கள் என்பது முக்கியமில்லை சொல்லிய விஷயம் நமக்கு பயன் உள்ளதாக இருக்கிறதா என்றுதான் பார்க்க வேண்டும்... கில்லர்ஜி சார் உங்கள் வருகைக்கும் கருத்து பகிர்விற்கும் நன்றி சார்

      Delete
  2. Replies
    1. தனபாலன் சார் உங்கள் வருகைக்கும் கருத்து பகிர்விற்கும் நன்றி சார்

      Delete
  3. கதைகள் அருமை. நாம் உணர்ந்து செயல்பட வேண்டிய கதைகள். ஆனால் இவற்றை ஜெயலலிதா சொல்லியிருபாரா என்றால் சந்தேகமே....

    https://www.sigaram.info

    ReplyDelete
    Replies
    1. சிகரம்பாரதி சார் ஜெயலிதா அவர்கள் ஒரு திருமண விழாவில் பேசியதுதான் இந்த கதைகள் இந்த செய்தி 2013 ல் எல்லா நாளிதழ்களிலும் வந்துள்ளது

      Delete

  4. நம்பிக்கை ஊட்டும் கதைகள்.சிறுவர்களுக்கு இளம் வயதில் கற்றுக் கொடுக்க வேண்டிய கதைகள்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும் கருத்து பகிர்விற்கும் நன்றி மதுரைத்தமிழன் சார்

      Delete
  5. நாம் ஏற்கெனவே கேள்விப்பட்ட கதைகளைத்தான் ஜெ சொல்லி இருந்திருக்கிறார். சிறந்த தன்னம்பிக்கைக்கு கதைகள் என்பதில் சந்தேகமில்லை.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும் கருத்து பகிர்விற்கும் நன்றி ஸ்ரீராம் சார்

      Delete
  6. நல்ல கதைகள். ஏற்கனவே கேட்டிருந்த கதைகள் என்றாலும் மீண்டும் படிப்பதில் தவறில்லை. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்து பகிர்விற்கும் நன்றி வெங்கட் நாகராஜ் சார்

      Delete

பட்டினத்தார் சுடுகாட்டில் தன் தாய் ஈமச்சடங்கு செய்தபோது பாடிய பாடல்கள்

பட்டினத்தார் சுடுகாட்டில் தன் தாய் ஈமச்சடங்கு செய்தபோது பாடிய பாடல்கள் பட்டினத்தடிகள் துறவியாக ஊர் ஊராகத் திரிந்து கொண்டிருந்த காலத்தில் அவர...