Saturday, August 22, 2020

விநாயகப்பெருமானை பற்றிய பல அறிந்த அறியாத விஷயங்கள்.

known and unknown things about Lord Ganesha.


அனைவருக்கும் பிள்ளையார் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.... இந்த வாழ்த்தோடு பிள்ளையார் பற்றி அறிந்த அறியாத செய்திகள் பலவற்றை இங்கு பகிர்கின்றேன்.


 விநாயகப்பெருமானை பற்றிய பல அறிந்த அறியாத விஷயங்கள்.



விநாயகர் என்பதன் பொருள் {நாதமும் விந்துவும்}
விநாயகர் என்ற சொல்லுக்கு “வி” – இல்லாமை. “நாயகன்” – தலைவன். விநாயகர் – மேலான தலைவர், தனக்கு மேல் தலைவன் இல்லாதவர் என்று பொருள்.


ஓம் அநீஸ்வராய நம: என்னும் மந்திரத்திற்கு – தனக்கு மேல் ஒரு ஈஸ்வரன் இல்லாதவர் என்பதே பொருள். ஸ்ரீ ஆதி சங்கரர் தாம் அருளிய கணேச பஞ்சரத்னத்துள் “அநாயகைக நாயகம்”என்று கணபதியைப் போற்றுகின்றார். அநாயக-ஏக-நாயகம்= அதாவது தனக்கு மேலோரு நாயகரில்லாமல் தானே ஏக நாயகனாக இருப்பவர் என்பது இதன் பொருள். வழிபடுவோரின் விக்கினங்களை {இடையூறுகளை} போக்குபவராதலின் இவருக்கு விக்னேஸ்வரன் என்றும் கணங்களுக்குத் தலைவராயிருப்பதால் கணநாதன், கணபதி என்று அன்புடன் வணங்கப்படுகிறார்.

  


விநாயகர் வடிவத்தின் தத்துவம்.
விநாயகருடைய வடிவம் விந்தையானது. யானைத் தலையும், பெறுவயிறும், மனித உடலும், ஐந்து திருக்கைகளும் கூடிய வடிவமும், இடையின் கீழே மனித உடம்பும், இடைக்குமேல் கழுத்துவரை தேவ உடம்பும். மேலே விலங்கின் தலை {யானைத்தலை} பூதப்பெருவயிறு. ஒரு பக்கம் கொம்பு – ஆண் தன்மை, மற்றொரு பக்கம் பெண் தண்மை. அஃறிணை,உயர்திணை அம்சங்கள் பொருந்திய இந்நிலையை உற்று நோக்கின் விநாயகப்பெருமான்-தேவராய், மனிதராய், பூதராய், விலங்காய், ஆணாய், பெண்ணாய், எல்லாமாய்த் திகழ்கிறார் என்பது புலனாகும்.


விநாயகரின் ஐந்து திருக்கரங்கள்.

விநாயகருக்கு ஐந்து திருக்கரங்கள் உள்ளன. 

1,துதிக்கையில் அமிருத குடம்,
2,பின் இரண்டு கைகளில் பாசம், அங்குசம்.
3,முன் கைகளில் வலக்கையில் ஒடிந்த கொம்பு{தந்தம்}. இடக்கையில் மோதகம் {அமுதக் கலசம் என்றும் கூறப்படும்}
திருமூலர் “ஐந்து கர்த்தனை,ஆனை முகத்தனை” எனக் கூறுகிறார். இவரது துதிக்கையில் குடம் இருக்கிறது. இக்குட நீரால் தாய்,தந்தையரை நீராட்டி வழிபடுகிறார். தாய்,தந்தையரிடம் இவருக்கு இருக்கும் பக்தி இதனால் நன்கு விளங்குகிறது. பின்னிறண்டு கைகளில் பாசம்,அங்குசங்களை வைத்திருக்கிறார். யானையை அடக்க யானைப்பாகன் பாசாங்குசங்களை வைத்திருப்பான். விநாயகரோ அவற்றைத் தன் கைகளில் வைத்துக்கொண்டிருக்கிறார். ஒரு யானைப்பாகன் யானையைப் படுகுழிகளில் விழாமல் தடுத்து நேர்வழியில் நடத்துவது போல உயிர்களாகிய நாம் ஆசாபாசங்களாகிய படுகுழிகளில் விழாமல் தடுத்து நல்ல வழியில் நடத்தி நம்முடைய ஆசாபாசங்களை அவரது கையிலிருக்கும் பாசத்தால் கட்டி அங்குசத்தால் வெட்டிப் பாச நீக்கம் செய்து முக்திப்பேற்றை அருளுகிறார்.
முங்கைகளில் வலது கையில் ஒடிந்த கொம்பினை வைத்திருக்கிறார். இது கயமுகா சுரனைக் கொன்று தேவர்களைக் காப்பாற்றியதன் அறிகுறியாகும். இடது கையில் மோதகத்தைத் தாங்கி இருக்கிறார். இது அமிருத கலசம் என்றும் கூறுவர். மோதகத்தில் இவருக்கு விருப்பம் அதிகம். மோதகம் என்பதன் பொருள் அழிவற்ற தன்மை அல்லது நிஜாநந்தம் என்பது ஆகும்.
ஐந்து கரங்களில் ஒரு கையைத் தாய் தந்தையருக்கும், மற்றொருகையைத் தேவர்களின் நலத்தின் பொருட்டும், ஒரு கையைத் தன் பொருட்டும் ஆக்கி, இரு கைகளை ஆன்மாக்களாகிய நமக்கு உதவுதன் பொருட்டு வைத்துக் கொண்டிருக்கிறார்.

இக்கருத்தை
“பண்ணியம் ஏந்தும் கரம் தனக்காக்கிப்
பானிலா மருப்பமர் திருக்கை
விண்ணவர் காக்கி அரதனக்கலச வியன்கரம்
தந்தை தாய்க் காக்கிக்
கண்ணிலாணவ வெங்கரி பிணித்தடக்கிக்
கரிசினேற் கிருகையுமாக்கும்
அண்ணலைத் தணிகை வரைவளர் ஆபத்சகாயனை
அகந்தழீஇ களிப்பாம்”
என்ற தணிகைப் புராணப் பாடல்களில் அறியலாம். விநாயகருடைய உருவம் பல அரிய உண்மைகளை உணர்த்துகிறது. முன்னே சொல்லியபடி அவர் ஆணல்லர் பெண்ணுமல்லர், அலியோ எனில் அதுவுமல்லர், யானைத்தலை,தேவ உடல் இவற்றைக் கொண்டிருப்பதால் இவர் மிருகமும் அல்லர், மனிதரும் அல்லர். தொந்தி வயிற்றோடும் சப்பைக் காலோடும் இருக்கிறார். இவற்றால் விநாயகர் நாம் காணும் எவ்வகை இனத்தையும் சாராதவர் என்று உணர்கிறோம்.'

யானைக்கு மதஜலம் ஒழுகுவது போல் இவருக்கும் வலப்பக்கம் அறக்கருணையும், இடப்பக்கம் மறக்கருணையும் பொழிகிறது. இதனைப்
பரஞ்சோதி முனிவர்

“கருணையென்னும் வெள்ளமதம் பொழி சித்தி வேழத்தை நினைத்து வரும் வினைகள் தீர்ப்பாம்” என்று கூறுகிறார்.

சிவனுக்குப் பிள்ளையார்,முருகர்,வீரபத்திரர் என்று மூன்று குமாரர்கள் உண்டு.இவர்களில் விநாயகரே சிவனுடைய பிள்ளைகளில் முதன்மையானவர் என்பதை “பிள்ளையார்” என்ற சிறப்புப் பெயரால் அறியலாம். பிள்ளையாரை வணங்குவதால் மும்மலங்கள் விலகும், திருமகள் வந்துறைவாள், இடையூறுகள் அகலும், இருள்வினை நீங்கும்.
விநாயகரே குருவாக வந்து அருள் புரிவார் என்பதனை ஔவ்வைப்பிராட்டியார்
“குருவடிவாகிக் குவலயந் தன்னில்,திருவடி வைத்து”
எனக்கூறுவதால் அறியலாம். அவரே முக்தியும் தருபவர் என்பதை ஔவ்வைப்பிராட்டியார். “இருத்தி முத்தி இனிதெனக் கருளி” என்ற வாக்கியம் நமக்கு உணர்த்துகின்றது.


ஔவ்வைப்பிராட்டியாரை விநாயகப்பெருமான் தனது துதிக்கையால் தூக்கிக் கைலாசத்தில் சேர்த்தார் என்ற வரலாறும் இதனை வலியுறுத்துகின்றது.
பிரணவத்தின் வடிவம்.

கணபதி திருவருவை வலது காது முதல் தொடங்கி தலையைச் சுற்றி வளைத்து இடது காது வரை கொண்டு வந்து தொங்கும் தும்பிக்கை வரை நீட்டிக்கொண்டு கழித்தால் ஓம் என்ற பிரணவ வடிவம் புலப்படும். கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்.

சிவபெருமானிடத்திலிருந்து “ஓம்” எனும் நாதம் ஆதியில் பிறந்தது. ஓம் என்பதைப் பிரணவம் எனக் கூறுவர். ப்ர + நவ என்று பிரித்து என்றும் புதியது எனப் பொருள் கூறுவர். விநாயகர் பிரணவ வடிவனர். “ஓம் பிரணவானன தேவாய நம:” என்று அவரது மந்திரங்களில் ஒன்று. ஓம் எனும் பிரணவத்தின் வரி வடிவமே விநாயகர் வடிவம் அதன் ஒளி வடிவமே நாத பிந்துவாகும். மேல்சுழி இருக்குமிடம் விநாயகரது ஒடிந்த கொம்பு இருக்குமிடம். அது அங்கிருந்து வலது கை வழியாக மேலேறிக் கிரீடத்தைச் சுற்றி இடக்கைப் பாசம்வரை வந்து வளைந்து நெற்றிப் பொட்டு வரையிலும் சென்று துதிக்கை வழியாகக் கீழ் இடக்கை வரை வந்து கால்வரை இறங்குகிறது. இடக்கையும் அதிலிருக்கும் மோதகமும் {0}ம் என்பதைக் குறிக்கிறது.ஆதலின் ஓம் எனும் வரி வடிவமே விநாயகரது வடிவமாகும்.

    பிள்ளையார் சுழியின் பொருள்
பிள்ளையார் சுழி என்பது அகரம்,உகரம்,மகரம் {அ,உ,ம்} ஆகிய மூன்றையும் அடக்கியுள்ள நாதப்பிரமமாகிய “ஓம்” என்னும் பிரணவத்தின் ஆரம்ப வடிவம். அதில் உள்ள வட்ட வடிவம் சிவசக்தி பீடம். கோடு சிவலிங்கம் என்றும் சொல்லப்படும் எழுதத் தொடங்கும்முன் பிள்ளையார் சுழியை எழுதுவது. எழுத மேற்கொள்ளும் செயல் இடையூறின்றி முடிய ஸ்ரீ மஹா கணபதியை நிறுத்தி வழிபடுவதைப் போன்றதாகும்.

கணபதி வழிபாடு தத்துவம்.
உயிர்களின் உடம்பில் உள்ள ஆறு அதரங்களில் மூலாதாரத்தில் சுருண்டுகிடக்கும் குண்டலினி சக்தியின் மூலக்கனலை எழுப்பி பிரம்மத்துடன் ஆக்ஞையில் ஒன்றிடச்செய்வது. {யானை-பிரணவ வடிவம்} பிள்ளையாரின் மூல வடிவம் ஓம். ஓம்கார வடிவம் ஓம் என்பது தெய்வீக ஒளிவடிவம். வாழ்க்கை என்பதே தெய்வீக ஒளிவடிவில் அடங்கும் விஷயம்தான் என்பதை அறிந்துகொள் என்ற அறிவுரை.

வாகனம் மூஷிகத்தின் தத்துவம்.

ஆங்காரத்தின் வடிவமான பெருச்சாளி இருளை விரும்பும்; கேடு விளைவிக்கும்; கீழ்நோக்கும்; அஞ்ஞானம் {அறியாமை} ஆணவத்தின் அடையாளம். ஓங்கார வடிவான மேல்நோக்கும் மெய்ஞான வடிவமான பிள்ளையார் சிறிய பெருச்சாளியை தன் கால் கீழ் கொண்டு இருப்பது. அறியாமையையும், செருக்கையும் அடக்கி ஆள்பவர் என்பதையும் எல்லாவற்றிற்கும் ஆதாரமாகவும் தாங்குபவராகவும் விளங்குபவர் என காட்டுகிறது.

  விநாயகப்பெருமானின் ஆயுதங்கள்.
பாசம், அங்குசம், தந்தம், வேதாளம், சக்தி, அம்பு, வில், கத்தி, கேடயம், சம்மட்டி, கதை, நாகபாசம், சூலம், குந்தாலி, மழு, கொடி, தண்டம், கமண்டலம், பரசு, கரும்பு வில், சங்கம், புஷ்ப்பாணம், கோடாரி, அட்சரமாலை, சாமரம், கட்டுவங்கம், சக்கரம், தீ அகல், வீணை.

தோப்புகரணம்.
தோப்புகரணம் என்பது குண்டலினி யோகத்தின் ஒரு அங்கமாகும். அந்தக்கரணமாகிய மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்ற நான்கும் புறக்கரணமாகிய கை, கால், கண் முதலியன தூண்டப்பட்டு மனித உடலில் அடிவயிற்றின் கீழ் ஓங்காரவடிவத்தில் அமைந்து இருக்கும் சுஷீம்னா நாடி ஒட்டி எழுப்பப்படுகிறது. {மூலாதார சக்தியை சகஸ்ர தளத்தில் பாய்ச்சுவது.}
தேவியோடு திகழும் கணபதி ரூபங்கள்.
{பிரம்மாக்கு கமலை,வல்லி என இரு பெண்கள் தோன்றி விநாயகரை மணந்தனர் என்று ஒரு புராணம் உண்டு.}
1,சக்தி கணபதி, 2,மகா கணபதி, 3,ஊர்த்துவ கணபதி, 4,உத்தண்ட கணபதி, 5,சங்கடஹர கணபதி.


  விநாயகரும், பஞ்சபூத தொடர்புடைய இருக்கைகளும்.

விநாயகர் இருக்குமிடங்கள். 1,அரசமரம்-ஆகாயம். 2,வாதாராயண மரம்-வாயு. 3,வன்னிமரம்-தேயு.{அக்கினி} 4,நெல்லிமரம்-அப்பு{நீர்} 5,ஆலமரம்-பிருதிவி{மண்} தொடர்புடையவை.

விநாயகருக்கு உகந்த பத்திரங்கள் {இலைகள்}
1,முல்லைப்பத்திரம் 2,கரிசலாங்கண்ணி 3,வில்வபத்திரம் 4,ஊமத்தை இலை 5, இலந்தை இலை 6,வெள்ளறுகம்பூல் வேருடன் 7,வன்னி இலை 8,நாயுருவி பத்திரம் 9,கண்டங்கத்தரி இலை 10,அரளி இலை 11,எருக்கி இலை 12,மருதை இலை 13,விஷ்னுகிரந்தி இலை 14,மாதுள இலை 15,தேவதாரு இலை 16,மருவு பத்திரம் 17,அரசு இலை 18,ஜாதி மல்லிகை இலை 19,தாழை இலை 20,அகத்தி கீரை முதலியன.

கணபதி வழிபாட்டில் அர்ச்சனை செய்ய வேண்டிய 21      இலைகளில் பலாபலன்கள்.
1,மாவிலை – அறம்,நீதி. 2,கரிசாலங்கன்னி – இல்வாழ்க்கைக்குத் தேவையான பொருள். 3,வில்வம் – சுகம். 4,அருகம் – சகலபாக்கியம். 5,இலந்தை – கல்வி.அறிவு. 6,ஊமந்தை – பெருந்தன்மை குணம். 7,வன்னி – பல நண்மைகள். 8,நாயுருவி – வசீகரம். 9,கண்டங்கத்திரி – வீரம். 10,அரளி – வெற்றி. 11,அரசு – உயர்பதவி,காரிய வெற்றி. 12,எருக்கு – வம்சவிருத்தி,கருவில் உள்ள சிசுவிற்கு பாதுகாப்பு. 13,மருதம் – புத்திரபாக்கியம். 14,துளசி – நுண்ணறிவு. 15,மாதுளை – பெரும்புகழ். 16,தேவதாரு – இதய வலிமை. 17,மரிக்கொழுந்து – இல்லரசுகம். 18,ஜாதிமல்லி – சொந்தவீடு, பூமிபாக்கியம். 19,நெல்லி –செல்வச் செழிப்பு. 20,கடன் நிவர்த்தி. 21,தவனம் – திருமணத்தடை நிவர்த்தி.

விநாயகருக்குப் பிரியமான நிவேதனம்.

சுண்டல், பொரி, கடலை, இளநீர், தேன், அப்பம், அதிரசம், முறுக்கு, கரும்பு, விளாம்பழம், கொழுக்கட்டை, மிளகுஅன்னம், சக்கரை பொங்கள், வடை, அவல், நாட்டுச்சக்கரை, கற்கண்டு,பேரீச்சை,திராட்சை.

விநாயகரும் அறுகம்புல் அர்ச்சனையும்...

விநாயகரை வணங்கும் முறை...
முதலில் வலக்கையால் முகத்துக்கு மேலாக இடப்பக்கத்திலும், இடக்கையால் வலப்பக்கத்திலும் தலையில் மூன்று முறை குட்டி. காதுகளைப் பிடித்துத் தோப்புக்கரணம் இட்டுக் கணபதியை வணங்க வேண்டும். உருண்டு திரண்ட நம் பாவங்கள் விநாயகர் அருளால் உடைத்து சிதறுவதாக நினைத்து தேங்காயை ஓங்கி அடித்துச் சிதற விட்டு நம் தீவினைகள் தொலைந்ததாக எண்ண வேண்டும்.

விநாயகர் முன் தலையில் மூன்று முறை குட்டிக்கொள்வதில் பொருள்

நமது தலையில் காதுக்கு அருகில் இருபக்கமும் அமிருதம் இருக்கிறது. தலையில் நாம் மூன்று முறை குட்டி கொள்ளும்போது அந்த அமிருதமானது நமது உடல் முழுவதும் பரவி குண்டலினியை எழுப்பி நமது உடலுக்கும் மனதுக்கும் உற்ச்சாகத்தையும் கொடுக்க வல்லது. இது உண்மை என்று அறிவியல் ஒத்துக்கொண்டுள்ளது.

வலம்புரி இடம்புரி விநாயகர்.
விநாயருடைய துதிக்கை வலப்புறமாக வளைந்திருப்பின் வலம்புரி விநாயகர். இடப்புறமாக வளைந்திருப்பின் இடம்புரி விநாயகர் என்றும் அழைக்கின்றோம். {வலம்புரியை விசேஷமாக கொள்வர்.}
“கம்”மென்று இரு – காரியம் ஆகும்.
இது உலக வழக்கில் உள்ள ஒரு பழமொழி. சும்மா இருந்தால் காரியமாகிவிடும் என்பது பொருளன்று. “கம்” என்பது கணபதி மந்திரத்தின் மூல மந்திரமாகும் கணபதியைப் பற்றிக்கொள் – காரியம் கைகூடும் என்பதே இதன் பொருள்.


“சங்கட ஹர சதுர்த்தி”
ஒவ்வொரு மாதத்திலும் பௌர்ணமி கழித்து நான்காம் நாள் சங்கடஹர சதுர்த்தி எனப்படும். இந்நாளில் விநாயகரை வழிபடின் எல்லாச் சங்கடங்களும் நிவர்த்தியாகும். இந்நாளில் இரவில் 9.மணிக்கு மேல் சந்திரனைப் பார்த்த பிறகே விநாயகர் வழிபாடு நடைபெறும். மாசி,ஆவணி மாதத்தில் வருவது மஹா சங்கட ஹர சதுர்த்தி எனப்படும். அதுவும் செவ்வாய் கிழைமையில் பொருந்தி வருமாயின் மிகவும் விசேஷமாகும்.

 அரசமர, வேப்பமர விநாயகரும், பிரதக்ஷிணமும்.

பிரதக்ஷிணம் யார் வேண்டுமானாலும் செய்யலாம். ஸ்நானம் செய்து மடியாக ஆண்கள் பெண்கள் இருவரும் வீபூதி குங்குமம் இட்டுக்கொண்டு காலை 7.மணிக்குள் 5,7,அல்லது 11 தடவையாவது பிரதக்ஷிணம் செய்ய வேண்டும். எள்,வெல்லம் நிவேதனம் செய்யலாம்.வெள்ளி, சனிக்கிழமைகளில் அவசியம் பிரதக்ஷிணம் செய்வது மிகவும் விசேஷமாகும். காலை 8 மணிக்கு மேல் அரசமரத்தை வலம் வரக்கூடாது. தினமும் அரசமரத்தையும் அங்கு இருக்கும் விநாயகப்பெருமானுக்கும் தீபம் ஏற்றி நீர் அபிஷேகம் செய்தல் நாகதோசம், புத்திரதோசம்,தாரதோசம் போன்றவைகள் விலகும் என்பது தின்னம்..

விநாயகருக்குரிய விரத நாட்கள்.

வெள்ளிக்கிழமை, விநாயக சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி.
விநாயகர் நடனம் – காஞ்சியில் விகடக்கூத்து; திருப்பழுவூரில் ஆனந்த நடனம், {கயாமுகசுரனை அழித்த பின்பு}
விநாயகர் சிவ பூஜை – திருச்செங்காட்டங்குடி,
திருவெண்ணை நல்லூர் – மெய்கண்டதேவருக்கு 5.வயதில் ஞான உபதேசம் செய்தார் விநாயகப்பெருமான்.
திருவெண்காடு – விநாயகர் அகோர மூர்த்திக்கு உபதேசம். {காணாபத்யம் மதத்தினர்க்கு குருநாதர் அகோர மூர்த்தி}
மனிதமுக விநாயகர் – நிலதர்ப்பணபுரி {ஆதி விநாயகர்}
4-வீதி விநாயகர் – திருக்கடவூர்;பூவனூர்; திருச்செங்காட்டங்குடி,

 விநாயகர் அறுபடை வீடு.

1, திருவண்ணாமலை – நுழைவு வாயில் வடக்கு பார்த்த வினைதீர்க்கும் விநாயகர்.
2, விருத்தாசலம் – கோயில் நுழைவு வாயில் ஆழத்து பிள்ளையார்.
3, திருக்கடவூர் – கள்ளவாரண பிள்ளையார்.
4, மதுரை மீனாக்ஷி – சன்னதி நுழைவு மண்டப சித்தி விநாயகர்.
5, காசி – துண்டி விநாயகர்.
6, திருநாரையூர் – பொல்லாப்பிள்ளையார்

  ஓம் கம் கணபதயே நம:
வட மொழி எழுத்துக்கள் ஐம்பதும் தனித்தனியே விஷேட பலனை தனது உச்சார விஷேடத்தால் அடைவிக்கும் திறனுடைய என்பது ஆகம கருத்து.
ஓம் – புத்தி, முத்தி, லோக வசியம்.
கம் – க – இடையூறுகளை நீக்கும்.
ண – விரும்பும் சித்திகளைத் தரும்.
ப – விரும்பியன நிறைவேறலோடு ஜுரம் முதலிய நோய் நீக்கம்.
த – வெற்றியைத் தரல்.
யே – {ய்+ஏ} உச்சாடண பலத்தை தந்து சர்வார்த்த சித்தியோடு வசீகரத்தைத் தரும்.
நம – பாவ நாசமும் வெற்றியும்.
இம் மகா கணபதி மந்திர ஜபம் சர்வ சித்தியைத் தருவதோடு இடையூறுகளையும் நோய்களையும் நீக்கி எவ்வகை மன விருப்பங்களையும் அனைத்து வசீகரத்தையும் வழங்கி முடிவில் முத்திப்பேற்றினையும் அளிக்க வல்லது எனும் பொருள் தருகிறது.

 விநாயகரை தண்ணீரில் கரைப்பது ஏன்?

விநாயகர் சதுர்த்தி தினத்தில் விரதம் இருந்து, “மிருக்திகை”{மண்} கொண்டு செய்யப்பட்ட விநாயகருக்கு பூஜை செய்ய வேண்டும் என்று வேதத்தில் கூறப்பட்டுள்ளது. அந்த மண்ணில் புகழ், கீர்த்தி, பாப நிவர்த்தி, தேக புஷ்டி சர்வமும் கிடைப்பதாக வேதங்கள் கூறுகின்றன. விநாயகர் சதுர்த்தி தினத்தில் மட்டும் மிருக்திகை கொண்டுதான் விநாயகர் சிலைகளை செய்ய வேண்டும். மண்ணினால் செய்யப்பட்ட சிலைகள் நீண்டநாள் தாக்கு பிடிக்காது. இதனால் பூஜை முடிந்த பிறகு 4.வது நாளில் தண்ணீரில் கரைக்கலாம். தண்ணீரில் கரைப்பதால் மணல் தண்ணீரோடு கரைந்து விடுகிறது. விநாயகர் சிலையில் இருந்த மணல் மற்றவர் கால்ல் படாது. தோஷமும் நீங்கும் இதனால்தான் விநாயகர் சிலைகள் பஞ்ச பூதங்களில் ஒன்றான தண்ணீரிலோ, கடலிலோ,குளத்திலோ,கிணற்றிலோ,கரைக்கப்படுகிறது. விநாயகர் கரைக்கப்படுவதை வேதத்தில் “அமிருத ஏவ ஸ்வர்கே லோகே ப்ரபித் விஸ்பதி”என்று கூறுகிறாகள்

  

known and unknown things about Lord Ganesha.

 
சுபம்...

 இப்படிக்கு உங்கள்
அன்பு

13 comments:

  1. அருமை. தள வடிவமைப்பு நன்றாக உள்ளது.

    ReplyDelete
    Replies

    1. ஜோதிஜி சார் உங்களின் முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி... கூகுல் கொடுத்த வடிவமைப்பை தேர்ந்தெடுத்தது மட்டும் நான் . அதனை நான் வடிவமைக்கவில்லை....அந்த அளவிற்கு எல்லாம் கணணி ஞானம் எல்லாம் எனக்கு இல்லை சார்

      Delete
  2. Replies
    1. திண்டுக்கல் தனபாலன் சார் உங்கள் கருத்திற்கு மிகவும் நன்றிகள் சார்.. தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள் சார்

      Delete


  3. நலம் பெற்று வலையுலகம் திரும்புவது அறிந்து மகிழ்ச்சி. விநாயகர் சதுர்த்தி அன்று ஒரு விநாயகர் பற்றி தகவல்கள் அடங்கிய பகிவிற்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. அவர்கள் உண்மைகள் சார் உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சார்

      Delete
  4. விநாயகர் வரலாறு பிரமிப்பான பதிவு.

    ReplyDelete
    Replies

    1. உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி கில்லர்ஜி சார்

      Delete
  5. அற்புதமான தகவல்கள் மிக நன்றி அன்பு அவர்களே. நல்ல நலம் பெற வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வல்லிசிம்ஹன் மேடம் உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

      Delete
  6. அனைத்து தகவல்களும் அருமை.
    கடைசி பிள்ளையார் படம் அருமை.
    நோய் தொற்றை போக்கட்டும் விநாயகர்.

    பதிவுகள் தொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. அம்மாடி... எவ்வளவு தகவல்கள்... அருமை.

    ReplyDelete
  8. சிறப்பான தகவல்கள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete

பட்டினத்தார் சுடுகாட்டில் தன் தாய் ஈமச்சடங்கு செய்தபோது பாடிய பாடல்கள்

பட்டினத்தார் சுடுகாட்டில் தன் தாய் ஈமச்சடங்கு செய்தபோது பாடிய பாடல்கள் பட்டினத்தடிகள் துறவியாக ஊர் ஊராகத் திரிந்து கொண்டிருந்த காலத்தில் அவர...