Wednesday, September 19, 2018

மனமென்னும் பாத்திரத்தை மனதார நிரப்புங்கள்!

மனமென்னும் பாத்திரத்தை மனதார நிரப்புங்கள்!



மனிதர்களைப் படிப்பதுதான் வாழ்க்கைக்கான அடிப்படை தேவை. ஆனால், அதை என்னவோ நாமே பலமுறை கீழே விழுந்து, எழுந்துதான் கற்க வேண்டியிருக்கிறது. குழந்தைப் பருவத்திலேயே கற்றுக்கொடுக்கவேண்டிய, ஒரு கலை.

தலையாட்டிக்கொண்டே இருக்காமல் நடுவில் உங்கள் சந்தேகங்களைக் கூச்சப்படாமல் கேளுங்கள். என் கணவர், பல நேரங்களில் அலுவல் சம்பந்தமான விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளும்போது, நான் அதுவரை அறிந்திராத புதியவற்றை மேற்கோள்காட்டிப் பேசுவார். அப்போது தயக்கமின்றி, அது என்னவென்று தெரிந்துகொண்டு, மீண்டும் தொடருமாறு கேட்டுக்கொள்வேன்.

தான் எடுத்துக்கொள்ளும் மருத்துவம் பற்றிப் பேசுபவர்கள் IUV, IVU என்று சுருக்கமாகச் சொல்லிக்கொண்டே போவார்கள். நடுவில் மென்மையாக அது என்னவென்று கேளுங்கள். நாமும் ஒரு புது விஷயம் கற்றது போலிருக்கும், பேசுபவரும் நாம் ஏனோ தானோவென்று கேட்காமல், கவனமாக  இருக்கிறோம் என்று உற்சாகமடைவார்.

பல குடும்ப/அலுவல்/அக்கம்பக்கத்து சண்டைகளுக்குக் காரணமே, `கம்யூனிகேஷன் கேப்' எனப்படும் புரிதலில் ஏற்படும் குழப்பம்தான். காரணம் என்னவென்றால், எப்போது விரிவாகப் பேச வேண்டுமோ அப்போது ஓரிரு வார்த்தைகள் பேசுவதும், எப்போது சுருக்கமாகப் பேசவேண்டுமோ அப்போது தேவையில்லாமல் பேசிவிடுவதும் தான். உதாரணமாக, உங்களுக்கு கணவர் ஒரு குறிப்பிட்ட நண்பரிடம் பேசுவது பிடிக்கவில்லை என்றால், `ஏன்னு கேட்காதீங்க. எனக்குப் பிடிக்கல, அவர் நட்பை கட் பண்ணுங்க' என்று சொல்வது மனக் கசப்புக்குத்தான் வழிவகுக்கும். சங்கடமான விஷயத்தைப் பேசப் போகிறீர்கள் என்றால், நீங்கள் வலியுறுத்தும் கருத்துக்கான நியாயமான காரணத்தையும் சேர்த்துச் சொல்ல தயாராக இருங்கள்.

பொதுவாகவே வளவள பேச்சைத் தவிர்த்து, முக்கியமானவற்றில் கவனம் செலுத்துங்கள். தேதிகள்,  மனிதர்கள் / ஊர் பெயர் இவற்றைத் தேவைப்படும் இடத்தில் மட்டும் பயன்படுத்துங்கள். `பஸ்ஸில் ஏறும்போது கீழே விழுந்து விட்டேன்' என்று சொல்ல வந்தீர்கள் என்றால், `போன 2016-ல் அக்டோபர் மாசம், பதினஞ்சாம் தேதி, சாயங்காலம் நாலே முக்காலுக்கு அஞ்சு நிமிஷம் இருக்கும்... அக்கா மகளைப் பார்க்கலாம்னு திருவான்மியூர் போக, 23சி பிடிக்கலாம்னு போனேன். அப்ப பார்த்து, நம்ம புழக்கடைத் தெரு மகேஷ் போன்ல, `அக்கா ஒரு நூறு ரூவா வேணும்'னு போன் பண்ணினான்.' இதைக் கேட்பவர் அநேகமாகத் தூங்கியிருப்பார்!

சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லாதீர்கள். முதியவர்களுடன் பேச ஏன் பொறுமை அவசியம் என்றால், ஒரே விஷயத்தை ஏற்கெனவே பலமுறை சொல்லிவிட்டோம் என்பதை மறந்துவிடுவார்கள். அதாவது முதுமையின் அடையாளம். நாமெல்லாம் செய்தால், எரிச்சல் அடைவதோடு நம் தலையைப் பார்த்தாலே ஓட்டம் பிடிப்பார்கள். திரும்பத் திரும்ப சொல்வதால், அழுத்தமாகச் சொல்கிறோம் என்று நினைத்தால், எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள். எரிச்சலூட்டுவதன்மூலம் எதையுமே சாதிக்க முடியாது... அல்லது நீண்ட நாளும் நிலைக்காது.

இங்கே எந்தக் கருத்தும் நிரந்தரமில்லை என்பதைப் புரிந்துகொண்டால் நல்லது. நேற்று எந்த உடை மோசம் என்றார்களோ, அது இன்று பரவாயில்லை என்று ஏற்கப்பட்டு நாளை ஃபேஷனாகியிருக்கும். கருத்துகளும் அப்படித்தான். ஒவ்வொரு கருத்துக்கும், ஒவ்வொரு சித்தாந்தத்துக்கும் நேரெதிராக ஒன்று இருக்கும். அதுதான் அக்கருத்தை, அச்சித்தாந்தத்தை வாழவும் வைக்கும். ராமாயணம் எழுதப்பட்ட இதே பூமியில் ராவண காவியத்துக்கும் இடமுண்டு. உங்களோடு முரண்படுகிறவர்களோடும் அணுக்கமாகப் பேசுங்கள். கொள்கையில் எதிரெதிர் துருவங்களான ராஜாஜியும் பெரியாரும் நட்போடு இருந்து காட்டியிருக்கிறார்கள்.

உரையாடலுக்கு மிக முக்கியமான ஒன்று கவனிப்பது. இரு மனிதர்களுக்கு பேசுவதில் இருக்கும் ஆர்வம், கேட்பதில் இல்லையென்றால், அவ்விருவருக்கிடையே நடப்பதை உரையாடல் என்போமா? நிறைய கவனித்து, தேவைக்கேற்ப பேசும் மனிதர்களைக் கவனித்தால் தெரியும். அதிக எண்ணிக்கையிலான நண்பர்களைக் கொண்டிருப்பார்கள். பலரும், பதில் சொல்வதற்காகக் கவனிக்கிறோம். கவனிப்பது என்றால் கவனிப்பது மட்டுமே!

வாழ்க்கை என்பதே கற்றுக்கொள்ளலுக்கான பள்ளிதான். சக மனிதர்களோடு மோதலில்லாமல் உரையாட கற்றுக்கொண்டால், இனிய வகுப்பாக அது மாறும் என்பதில் சந்தேகமில்லை. `காலி கோப்பையைத்தான் நிரப்ப முடியும்' என்பதாக ஜென் தத்துவம் ஒன்றுண்டு. எந்த உரையாடல் நம் மனமென்னும் பாத்திரத்தை நிரப்பும் என்று தெரியாது. ஆகையால், திறந்த மனதோடு, காலி கோப்பை போல காத்திருப்போம்!

படித்ததில் பிடித்தது
"குத்தூசி

எழுதியவர் விக்னேஸ்வரி சுரேஷ் -  இதழ் விகடன்

1 comment:

  1. அருமையான உளவியல் கட்டுரை எழுதியவருக்கு வாழ்த்துகள் - கில்லர்ஜி

    ReplyDelete

பட்டினத்தார் சுடுகாட்டில் தன் தாய் ஈமச்சடங்கு செய்தபோது பாடிய பாடல்கள்

பட்டினத்தார் சுடுகாட்டில் தன் தாய் ஈமச்சடங்கு செய்தபோது பாடிய பாடல்கள் பட்டினத்தடிகள் துறவியாக ஊர் ஊராகத் திரிந்து கொண்டிருந்த காலத்தில் அவர...